நஷீட் மீது தாக்குதல்: மாலைத்தீவு ஜனாதிபதி கண்டனம்

மொஹமட் நஷீட் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மாலைத்தீவு ஜனாதிபதி

by Staff Writer 07-05-2021 | 9:09 PM
Colombo (News 1st) மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மீது இலக்கு வைத்து நேற்று (06) நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார். அவசர சந்திப்பொன்றை நடத்திய மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட், இந்தத் தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கூறியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்பொதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொஹமட் நஷீட் தமது வீட்டிலிருந்து வௌியேறி காரில் ஏறவிருந்த போது நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அவுஸ்திரேலியாவின் ஃபெடரல் பொலிஸார் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவிற்கு செல்லவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு விசேட வைத்தியர் குழுவினால் சிகிச்சை அளிக்கப்படுவதாக மாலைத்தீவு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவின் முதலாவது ஜனநாயகத் தேர்தலின் மூலம், ஜனநாயகக் கட்சியின் தலைவர் மொஹமட் நஷீட் 2008 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவானார். ஆட்சியை இழந்தவுடன் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட மொஹமட் நஷீட், தற்போதைய ஆட்சியில் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மாலைத்தீவில் இடம்பெற்ற ஊழல் தொடர்பிலான அறிக்கை நேற்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மொஹமட் நஷீட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.