விதிமுறைகளை பின்பற்றாத பஸ்களுக்கு எச்சரிக்கை

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

by Staff Writer 06-05-2021 | 8:37 AM
Colombo (News 1st) சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாது பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டார். பெஸ்டியன்மாவத்தை, மாகும்புற, வவுனியா, கடவத்தை மற்றும் கடுவளை ஆகிய பிரதான பஸ் தரிப்பிடங்களிலும் சோதனை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்தார். இதேவேளை, நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை எதிர்வரும் நாட்களில் 60 தொடக்கம் 65 வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் 48 ரயில் சேவைகளே முன்னெடுக்கப்படுகிறது.