தோட்டத்தொழிலாளர்களின் மகன் சட்டமன்றத்திற்கு தெரிவு

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திரும்பிய பொன். ஜெயசீலன் தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவு

by Staff Writer 05-05-2021 | 5:18 PM
Colombo (News 1st) சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திரும்பியவர்களில் ஒருவரான பொன். ஜெயசீலன் தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதற்கமைய, நீலகிரியில் வசித்து வருகின்ற தாயகம் திரும்பிய தமிழர்களின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தாயகம் திரும்பிய தமிழரான பொன். ஜெயசீலன் கூடலூர் தனித் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இலங்கையில் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டிருந்தவர்களில் சுமார் 5 இலட்சம் பேர் 1964 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் மூன்று இலட்சம் பேர் நீலகிரியில் குடியேறி வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வசித்து வருகின்ற இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொன். ஜெயசீலன் தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது தாய் தந்தையர் இருவரும் தோட்டத்தொழிலாளர்கள் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.