கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

by Bella Dalima 05-05-2021 | 4:51 PM
ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. தனது பதிவுகள் மூலம் அவா் தொடா்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ட்விட்டா் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தோ்தலுக்கு பின் அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டிருந்தாா். அந்தப் பதிவுகளில் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவா், வன்முறைக்கு மம்தா பானா்ஜி தான் காரணம் எனக் கூறி அவரை மோசமாக விமர்சித்திருந்தார். ஏற்கனவே இதுபோல் பல கொந்தளிப்பூட்டும் பதிவுகளை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளாா். இந்நிலையில், மேற்கு வங்கத் தோ்தல், மம்தா பானா்ஜி குறித்த அவரின் பதிவுகள் ட்விட்டா் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, கங்கனா ரணாவத்தின் கணக்கை நிரந்தமாக முடக்குவதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ட்விட்டர் நிறுவன செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூகத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய பதிவுகள் தொடா்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் ட்விட்டா் நிறுவனம் தெளிவாக உள்ளது. எனவே ட்விட்டா் விதிமுறைகளின்படி, கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.