அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன்

by Staff Writer 05-05-2021 | 7:46 PM
Colombo (News 1st) நேற்று (04) வௌியான 2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான தனராஜ் சுந்தர்பவன், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்தியினை பெற்றிருந்ததுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் தனராஜ் சுந்தர்பவன் பதக்கம் வென்று சாதித்திருந்தார். உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற தனராஜ் சுந்தர்பவன், இணை பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வௌிப்படுத்தியவராவார். இதனிடையே அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் அம்பாறை - கல்முனை ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஐ.அன்பஸ் அஹமட் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டிய அன்பாஸ் அஹமட், மாகாண மட்ட சதுரங்கப் போட்டியிலும் சாதனை படைத்துள்ளார். இதேவேளை காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தின் அமந்தி மதநாயக்க வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில், ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் மாணவி சுசிகா சந்தசர, அகில இலங்கை ரீதியில் முதல் நிலையைப் பெற்றுள்ளார். குறித்த பாடசாலையின் அவிஷ்க சானுக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.