இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முயன்ற 86 இந்திய மீனவர்களை கடற்படை தடுத்து நிறுத்தியது

by Staff Writer 04-05-2021 | 4:15 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முயன்ற, 11 மீன்பிடி படகுகளில் பயணித்த 86 இந்திய மீனவர்களை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மன்னார் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் 24 மணித்தியால ரோந்து நடவடிக்கைகளை கடற்படை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய கடலோர காவற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களையும் படகுகளையும் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடல் வழியாக இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் வருகை தருவதை தடுக்கும் நோக்கில், கடற்படையின் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, வௌிநாட்டு மீன்பிடி படகுகளுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.