நேற்று (30) 1662 பேருக்கு கொரோனா தொற்று

நேற்று (30) 1662 பேருக்கு கொரோனா தொற்று; 11 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 01-05-2021 | 4:31 PM
Colombo (News 1st) நாட்டில் நாளொன்றில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் ஆயிரத்தை கடந்தது. நேற்று (30) 1662 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 1636 பேர் புது வருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 26 பேரும் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,08,146 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, தொற்றுக்குள்ளானோரில் 530 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய, நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 95,975 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுடன் 11,504 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மேலும் 11 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின. இதற்கமைய, COVID தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 79 வயதான பெண்ணொருவரும் தெஹியத்தகண்டியை சேர்ந்த 76 வயதான ஆணொருவரும் மாத்தளையை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதான ஆணொருவரும் வத்தளையை சேர்ந்த 53 வயதான ஆணொருவரும் திவுலபிட்டியவை சேர்ந்த 51 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பெபிலியாவல பகுதியை சேர்ந்த 77 வயதான ஆணொருவரும் அநுராதபுரத்தை சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரும், கொழும்பு 14 ஐ சேர்ந்த 94 வயதான ஆணொருவரும் பரகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த 65 வயதான ஆணொருவரும் களனியை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.