இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 01-05-2021 | 7:17 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்ந்து 10 ஆவது நாளாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 18.8 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், சுமார் 2,000,11 உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இருப்பினும், கையிருப்பிலுள்ள தடுப்பூசி குறைவாகவுள்ளதால் குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதனிடையே, இந்தியாவின் தேசிய வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஒக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை டெல்லியிலுள்ள வைத்தியசாலையொன்றில், ஒக்சிஜன் தீர்ந்தமையால் வைத்தியர் ஒருவர் உட்பட 8 பேர் இன்று மதியம் உயிரிழந்துள்ளனர்.