இந்தியாவிலிருந்து ஆஸி. சென்றால் சிறைத்தண்டனை

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டு சிறைத்தண்டனை

by Bella Dalima 01-05-2021 | 5:14 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு திரும்பி வந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தொற்று பரவல் அதிகரிப்பால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அவுஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்கு மே 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. இந்தியாவுடனான நேரடி விமான சேவையை அவுஸ்திரேலியா நிறுத்தியுள்ள போதும், வேறு நாடுகள் வழியாக இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு மக்கள் திரும்புவது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நடந்து வரும் IPL போட்டியில் பங்கேற்றிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கனேரிச்சர்சன் உட்பட 3 பேர் டோஹா வழியாக நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 66 ,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.