சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் போது இடையூறு விளைவித்த நபர் கைதாகி பிணையில் விடுவிப்பு

by Staff Writer 30-04-2021 | 4:22 PM
Colombo (News 1st) சீன பாதுகாப்பு அமைச்சரை ஏற்றிய வாகனம் கொழும்பிற்கு வருகை தந்த போது, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தருக்கு பொரளையில் இடையூறு விளைவித்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தன்னால் நேர்ந்த தவறுகளுக்கு நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் மன்னிப்புக் கோரியுள்ளார். இதன்போது, சந்தேகநபரை கடுமையாக எச்சரித்த நீதவான், 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 27 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீன பாதுகாப்பு அமைச்சர் கொழும்பிற்கு வருகை தந்த போது, பொரளையில் போக்குவரத்திற்கு மட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பத்தரமுல்ல பெலவத்த பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்