IPL போட்டியிலிருந்து பிரபல நடுவர்கள் இருவர் விலகல்

IPL போட்டியிலிருந்து பிரபல நடுவர்கள் இருவர் விலகல்

by Bella Dalima 29-04-2021 | 3:41 PM
Colombo (News 1st) IPL போட்டியிலிருந்து பிரபல நடுவர்கள் இருவர் விலகியுள்ளார்கள். இந்தியாவில் கொரோனா சூழல் தீவிரமாகியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவை சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் IPL போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், சொந்த நாட்டுக்குத் திரும்பினார். கொரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதால், IPL போட்டியிலிருந்து விலகுவதாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது இரு நடுவர்கள் இணைந்துள்ளார்கள். பிரபல நடுவர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரைஃபில் ஆகிய இரு நடுவர்களும் சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். நிதின் மேனனின் மனைவியும் தாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார். கொரோனா சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல வீரா்கள் விலகியுள்ள நிலையில், IPL போட்டிகள் தொடா்ந்து நடைபெறும் என IPL அணிகளிடம் BCCI தெரிவித்துள்ளது.