கிண்ணியாவில் பெண் எரியூட்டிக் கொலை; சந்தேகநபர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-04-2021 | 8:22 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த 9 ஆம் திகதி ஆலங்கேணி பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை இனந்தெரியாதவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, தீக்காயமடைந்த பெண் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸாரிடம் வினவியபோது, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறினர். குறித்த பெண்ணின் கணவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.