இந்தியாவில் கொரோனா உடல்களை தகனம் செய்வதில் சிக்கல்

இந்தியாவில் கொரோனா உடல்களை தகனம் செய்ய போதியளவு இடமின்மையால் சிக்கல்

by Staff Writer 28-04-2021 | 9:30 AM
Colombo (News 1st) இந்தியாவில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 02 இலட்சத்தை கடந்தது. முதல் தடவையாக நேற்று (27) அதிகமான கொரோனா மரணங்கள் இந்தியாவில் பதிவாகின. 3,306 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில், தொடர்ச்சியாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைகளில் சிக்கல் எற்பட்டுள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. உடல்களை தகனம் செய்வதிலும் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது. டில்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடம் இன்மையினால் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை தகனம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. டில்லியில் யமுனை ஆற்றங்கரைகளில் தகனம் செய்வது தொடர்பில் அம் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதனிடையே, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவப் பொருட்களை வழங்கி வருகின்றன. இதேவேளை 4,000 ஒக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.