பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டல் அருகில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

by Bella Dalima 22-04-2021 | 4:30 PM
Colombo (News 1st) தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் புதன்கிழமை இரவு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகின. சீன தூதர் உட்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் ஹோட்டலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் ஒரு காருக்குள் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.