கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் திருத்தங்கள்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

by Bella Dalima 22-04-2021 | 7:45 PM
Colombo (News 1st) நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலய சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து நாளை (23) கட்டாயமாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவித்தது. இந்த சட்டமூலத்தை ஆட்சேபித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் நான்காவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜமீர், சமர்ப்பணங்களை முன்வைத்து சட்டமூலத்தில் திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகக் கூறினார். இந்த திருத்தங்கள் தொடர்பிலான ஆவணமொன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த விடயங்களை மன்றில் தெரிவிப்பதற்கு முன்னதாக இடையீட்டு மனுதாரரான ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B.ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தமது தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவிற்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகள், சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த விடயங்கள் இடையே ​வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் இருதரப்பும் முன்வைத்த திருத்தங்களை ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது. உத்தேச ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்களாக இருக்கக்கூடிய வகையில் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமக்கு ஆலோசனை கிடைத்துள்ளதாக வழக்கின் இடையீட்டு மனுதாரர்களான நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சரவை செயலாளர் டொனால்ட் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன இன்று முற்பகல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். உத்தேச துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் நடைமுறையில் உள்ள முதலீட்டு சட்டங்கள், காணிச் சட்டங்கள், வர்த்தக சட்டங்கள் போன்றே உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு அப்பாற் செல்லும் சட்டமூலாக அமைந்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜமீல் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சுட்டிக்காட்டினார். கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை அரசாங்கத்திற்காக கைப்பற்றவும், கடலை நிரப்பி காணிகளை உருவாக்கவும் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம், முப்படைகள், ஆயுதப் படைகளின் பிரதானியும் நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான அரச தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பர்ஸானா ஜமீல் மன்றில் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிடம் குறித்த காணியை ஒப்படைக்கின்றமை தொடர்பில் ஆட்சேபிக்கும் சட்ட அதிகாரம் எந்தவொரு தரப்பிற்கும் இல்லையென சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பொருளாதார வலயம், உள்ளூராட்சி விடயதானத்திற்கு உட்படாத விசேட பொருளாதார பிராந்தியம் எனவும் கூறினார். தேசிய கொள்கைக்கு அமைய நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட பொருளாதார வலயத்தில் நாட்டிற்கு பாதகமான எந்த விடயமும் கிடையாது என பர்ஸானா ஜமீல் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.