ஹம்பாந்தோட்டை வந்துள்ள கப்பலில் கதிரியக்கபொருட்கள்

ஹம்பாந்தோட்டை வந்துள்ள கப்பலில் கதிரியக்கப் பொருட்கள் 

by Staff Writer 21-04-2021 | 3:09 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித்திடம் வினவிய போது, நேற்றிரவு (20) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலில் கதிரியக்க பொருட்கள் காணப்படுவதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக கூறினார். நெதர்லாந்தின் Rotterdam-இல் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் இந்த கப்பலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக , கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக எச்.எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். எனினும், கப்பலில் காணப்படும் பொருட்கள் என்ன என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால் உடனடியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கப்பலை வௌியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கடற்படையினரிடம் இந்த விடயம் குறித்து வினவிய போது, குறித்த கப்பலானது துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.