அரசு மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு

அரசாங்கம் மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பதாக TELO குற்றச்சாட்டு

by Staff Writer 21-04-2021 | 5:22 PM
Colombo (News 1st) தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதாகக் கூறி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போட்டுச் செல்வதாக தமிழீழ விடுதலை இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டதாலும் இந்தியாவின் நேரடி அழுத்தத்தின் காரணமாகவும் 13 ஆம் திருத்தம் காப்பாற்றப்பட்டு வருவதாக TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இந்தியாவை பகைத்துக்கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல், மறுபுறம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசாங்கம் கைகட்டி நிற்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை இழுத்தடிப்பு செய்து, காலம் தாழ்த்துவதன் மூலம் மாகாண சபையை பயனற்றுப் போக வைக்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கட்சிகள் தேர்தல் அரசியலையும் தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவை எனவும் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.