வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் இராஜினாமா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

by Staff Writer 20-04-2021 | 6:34 PM
Colombo (News 1st) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா இராஜினாமா செய்துள்ளார். துறைசார் அமைச்சரின் அழுத்தங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக ரேணுக பெரேராவினால் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு கணக்காய்வின் போது குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நியமிக்குமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அழுத்தங்களின் போது தாம் அதற்கு இணங்கவில்லை என ரேணுக பெரேரா கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் பணியாற்ற முடியாது என தெரிவித்து தாம் இராஜினாமா செய்ததாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.