கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேடபோக்குவரத்து

கொழும்பு - கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 19-04-2021 | 2:06 PM
Colombo (News 1st) கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்து, நாளை (20) மாலை 4 மணி முதல் நாளை மறுதினம் (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த காலப் பகுதியில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தலை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனடிப்படையில், புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. புனித அந்தோனியார் மாவத்தை - ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம் முதல் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி வாகனங்கள் உட்செல்ல மற்றும் வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராமநாதன் மாவத்தை - ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி வாகனங்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறிஸ்டி பெரேரா மாவத்தை - ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாகன சாரதிகள் மேற்கூறிய வீதிகளை தவிர்த்து, மாற்று வீதிகளின் ஊடாக தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் வாகனங்கள் ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, சங்கமித்தா மகா வித்தியாலய மாவத்தை ஊடாக புறக்கோட்டை நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புறக்கோட்டையிலிருந்து ஹெட்டியாவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள், ரெக்லமேஷன் வீதி, சைனா தெரு, ஐந்து லாம்பு சந்தி சுற்றுவட்டம், ஆட்டுப்பட்டித்தெரு, மகா வித்தியாலய மாவத்தை, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை ஊடாக ஹெட்டியாவத்தை நோக்கி பயணிக்க முடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.