எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்கு

பூரண அரச மதியாதையுடன் நடைபெற்ற எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்கு

by Bella Dalima 17-04-2021 | 10:44 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற எடின்பரோ கோமகன் பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு பூரண அரச மதியாதையுடன் இன்று நடைபெற்றது. புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. வின்சர் கோட்டை மற்றும் புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து​கொள்வோரின் எண்ணிக்கை முப்பதாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. COVID தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வின்சர் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பின் பூதவுடல், விசேட வாகனத்தில் புனித ஜோர்ஜ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இளவரசர் பிலிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரித்தானியாவின் 9 இடங்களில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 730 படை வீரர்கள், அணிவகுப்பில் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9 ஆம் திகதி தமது 99 ஆவது வயதில் இளவரசர் பிலிப் காலமானார்.