யாழ். துப்பாக்கிச்சூடு: இருவருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை துப்பாக்கிச்சூடு: இளைஞர்கள் இருவருக்கும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 17-04-2021 | 4:44 PM
Colombo (News 1st) யாழ் - பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் போடப்பட்டுள்ள வீதித் தடையை மீறி பயணித்த கெப் வாகனம் மீது பொலிஸாரினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்கான 23 மற்றும் 26 வயதான இளைஞர்கள் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபருக்கு வயிற்றில் துப்பாக்கிச்சூட்டு காயமேற்பட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் துப்பாக்கிச்சூட்டு காயமேற்பட்ட மற்றைய நபருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.