தெரணியகல பிரதேச சபைத் தலைவர் கைது

தெரணியகல பிரதேச சபைத் தலைவர் கைது

by Staff Writer 17-04-2021 | 3:21 PM
Colombo (News 1st) தெரணியகல பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நீர் விநியோக சபையினால் தெரணியகல - கும்புறுகம பகுதியில் விசேட நீர் விநியோக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்திற்காக கும்புறுகம பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் தேசிய நீர் விநியோக சபைக்கு உரித்தான நீர் அளவு மானிகள் உள்ளிட்ட சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 3 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் தெரணியகல பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, குறித்த களஞ்சியசாலையின் பொறுப்பாளரும் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 98 நீர் அளவு மானிகள் உள்ளிட்ட சில பொருட்களை தெரணியகல பிரதேச சபையின் தலைவர் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய, திருடப்பட்ட பொருட்களை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.