துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பலி

by Bella Dalima 16-04-2021 | 5:35 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் இண்டியானாபொலிசில் (Indianapolis) துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஃபெட்எக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதைக் கேட்டதாகவும் தானியங்கி துப்பாக்கியை ஒரு நபர் இயக்குவதைப் பார்த்ததாகவும் நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். துப்பாக்கிதாரி தனி ஆளாக செயற்பட்டதாகவும் அவர் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மேற்கொண்டு ஆபத்து ஏதுமில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்த போதே அதிகாரிகள் அங்கு சென்று நிலைமையைக் கையாண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.