இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

by Staff Writer 15-04-2021 | 2:10 PM
Colombo (News 1st) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் திரும்புவதற்கு இன்று (15) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பயணிகளின் வசதி கருதி அதிவேக வீதியில் 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தயுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதிவேக வீதியூடாக பெரும்பாலான பயணிகள் பயணிப்பதால், மேலதிகமாக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபையின் பிரதம செயல்பாட்டு அதிகாரி W.M.A.S.B. வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொது போக்குவரத்தில் பயணிக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் மீள தலைநகருக்கு திரும்புவதற்காக 4,000 பஸ்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று முதல் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அலுவலக ரயில் சேவைகள் வார இறுதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன கூறியுள்ளார்.