முல்லைத்தீவு கிரவல் அகழ்வு ; கைதான இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை

by Staff Writer 13-04-2021 | 10:26 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் அனுமதிப்பத்திரமற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிரவல் அகழப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். முல்லைத்தீவு - கருவேலன்கண்டல், மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரமற்ற காணியொன்றில் பெருமளவு கிரவல் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த காணிக்கு உறுதிப்பத்திரம் இல்லையென்பது தெரியவந்துள்ளது. அத்துடன், கிரவல் அகழ்வுக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது தொடர்பிலும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் என கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டதுடன் கிரவல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட டோசர் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், அப்பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.