விதிமுறைகளை மீறி பயணித்த 4 பேருக்கும் விளக்கமறியல்

அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல் 

by Staff Writer 13-04-2021 | 4:02 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் வீதி விதிமுறைகளை மீறி காரில் பயணித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அக்குரணையைச் சேர்ந்த நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (13) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரின் இரு பக்கங்களிலும் உள்ள கண்ணாடியை திறந்து கதவுகள் மீது அமர்ந்து, பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவம் தொடர்பில், காரின் சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த காரில் பயணித்த ஏனைய நால்வரும் அதிவேக வீதி பாதுகாப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் கண்டி - அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுக்கிடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் வாகன சட்டங்களை மீறியமை, வீதி ஒழுங்கினை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.