by Staff Writer 13-04-2021 | 8:15 PM
Colombo (News 1st) சித்திரை புதுவருடப் பிறப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ ஷென்ஹொம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வும் நம்பிக்கையும் உறுதி செய்யப்பட்டதாக சீனத் தூதுவர் கியூ ஷென்ஹொம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இரண்டு தடவைகள் தொலைபேசியில் உரையாடி இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான மூலோபாய ரீதியிலான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒத்துழைப்பு தொடர்பிலான முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் சீனத் தூதுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய புதிய பொருளாதார கேந்திர நிலையங்கள் அடைந்துள்ள வெற்றிகளை குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர், ஒன்றிணைந்த நீர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மத்திய நிலையம் மற்றும் தேசிய சிறுநீரக வைத்தியசாலையை விரைவில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.