இலங்கை - சீனா இடையே உடன்படிக்கை கைச்சாத்து 

இலங்கை - சீனா இடையே உடன்படிக்கை கைச்சாத்து 

by Staff Writer 12-04-2021 | 6:59 PM
Colombo (News 1st) சீனாவுடன் கடன் வசதிகளுக்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைய, 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடனான இந்த உடன்படிக்கையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன கைச்சாத்திட்டுள்ளார். இது தொடர்பில் பெய்ஜிங்கிலுள்ள சீனாவுக்கான இலங்கை தூதரகத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநிலைமையினால் பாதிப்படைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான இயலுமை, இந்த உடன்படிக்கையினூடாக ஏற்படுத்தப்படுமென சீனாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவினால் வழங்கப்படும் இந்த கடனுதவி, இலங்கையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்தவும் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கவும் காரணமாக அமையுமெனவும் பெய்ஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.