செ.அடைக்கலநாதனின் இறப்பர் முத்திரையுடனான கடிதங்கள்

செல்வம் அடைக்கலநாதனின் இறப்பர் முத்திரை பொருந்திய கடிதங்கள் தொடர்பான வௌிக்கொணர்வு

by Staff Writer 10-04-2021 | 8:16 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இறப்பர் முத்திரை பொருந்திய கடிதங்களை தமது தேவைகளுக்காக சிலர் பயன்படுத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அரச பணி கடித உறையில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இறப்பர் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வினயபோது, இன்றே தாம் இது குறித்து அறிந்து கொண்டதாகவும் தனது பெயரிலான முத்திரையை பயன்படுத்தியுள்ளமை தவறு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கேள்விப்படுவதனால் அது குறித்து தான் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவவுள்ளதாகவும் குறிப்பிட்டார். விடயங்களை ஆராய்ந்த பின்னரே அது குறித்து விசாரணைகளை கோரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். இதேவேளை, இது தொடர்பில் இதுவரை தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் முறைப்பாடு கிடைத்தால் அதனை ஆராய முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று (10) முற்பகல் நியூஸ்பெஸ்ட் வினவிய போது தெரிவித்தார்.