சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

by Staff Writer 09-04-2021 | 7:54 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (08) சந்தித்தனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். அபே ஜனபல வேக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதம செயலாளர் டியு குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாவும் பங்கேற்றிருந்தார். இந்த 11 கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் கூடிக் கலந்துரையாடியிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதன் முறையாகவே நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை சீர் செய்வது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.