ஷானி அபேசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 07-04-2021 | 5:30 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பஹா பிரதம நீதவான் மஞ்சுள கருணாரத்ன சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமை தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோஹன மெண்டிஸ், ஓய்வுபெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் நவரத்ன பிரேமதிலக்க ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் இன்று மன்றில் முன்னிலையாகவில்லை.