கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 06-04-2021 | 11:11 AM
Colombo (News 1st) இன்று (06) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 22 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். எஞ்சிய தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 56 நபர்களும் கம்பஹா மாவட்டத்தில் 14 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் ஐவரும் மன்னார் மாவட்டத்தில் நால்வரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 நபர்களும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - அவிசாவளை பிரதேசத்தில் மூவர் மற்றும் மருதானை பகுதியில் ஒருவர் உட்பட கொழும்பு மாவட்டத்தில் 56 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா - கட்டுநாயக்க பகுதியில் இருவரும் கொலன்னாவை பிரதேசத்தில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் - வேப்பங்குளம் பிரதேசத்தில் 4 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் வௌ்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நுவரெலியா, புத்தளம், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நாட்டில் இன்று (06) காலை வரையில் 93,595 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 90,563 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே, நேற்றைய தினம் (05) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. அதன்பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மொத்தமாக 586 பேர் உயிரிழந்துள்ளனர்.