1,000 ரூபா : மனு மீதான விவாதத்தை நடத்த அனுமதி

1,000 ரூபா சம்பளம்: மனு மீதான விவாதத்தை நடத்த அனுமதி

by Staff Writer 05-04-2021 | 4:37 PM
Colombo (News 1st) பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக இருக்க வேண்டும் என அறிவித்து அரசாங்கத்தினால் ​வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விவாதத்தை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி மனு மீதான விவாதத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட 20 நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் இந்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொழில் அமைச்சர் நிமல் சிலிபால டி சில்வா, தொழில் ஆணையாளர், தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறைக்கான சம்பள நிர்ணய சபையின் தலைவர் மற்றும் சபையின் ஏனைய உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.