தே.எண்ணெய் கொள்கலன்களை மீள அனுப்ப அறிவுறுத்தல்

நுகர்வுக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல் 

by Staff Writer 04-04-2021 | 7:01 PM
Colombo (News 1st) நுகர்வுக்கு பொருத்தமற்ற 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 1,000 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது உள்ளூர் சந்தைகளில் நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களால் அனைத்து மாவட்டங்களிலும் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.