வான்கேடே மைதான பணியாளர்கள் 8 பேருக்கு COVID தொற்று

மும்பை வான்கேடே விளையாட்டு மைதான பணியாளர்கள் 8 பேருக்கு COVID தொற்று

by Bella Dalima 03-04-2021 | 5:12 PM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் 06 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில், மும்பை வான்கேடே (Wankhede) விளையாட்டு மைதான பணியாளர்கள் 08 பேருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை வான்கேடே மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 10 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், மைதான ஊழியர்களில் சிலருக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் மைதான பராமரிப்பில் ஈடுபட்டிருந்த 19 ஊழியர்களுக்கு COVID பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அடுத்தகட்ட பரிசோதனை முடிவு நேற்று (02) வெளியானதில் மேலும் ஐவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனையோருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதிலும் மும்பையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் COVID தொற்றுடன் அடையாளங்காணப்படும் நிலையில், அங்கு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மும்பையில் நடைபெறவுள்ள IPL போட்டிகளை வேறு நகருக்கு மாற்ற BCCI நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.