by Bella Dalima 03-04-2021 | 6:26 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நாளையுடன் (04) பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.
இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழகத்தின் சில இடங்களில் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் ஆகியோரும் இன்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாளை இரவு 7 மணி வரை பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தொகுதியுடன் சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வௌியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.