சுகாதார வழிகாட்டல்கள் வௌியீடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல்கள் வௌியீடு

by Staff Writer 03-04-2021 | 4:36 PM
Colombo (News 1st) சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, உணவுப் பொருட்களை பரிமாறுதல், தொழில் ஆரம்பித்தல், கைவிசேட நடவடிக்கைகள், எண்ணெய் தேய்த்து குளித்தல் போன்ற செயற்பாடுகளை வீடுகளுக்குள்ளேயே முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு மத வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதாயின், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறவினர் வீடுகளுக்கு செல்வதையும் இனிப்பு பண்டங்கள் பரிமாறுவதையும் அயலவர்களுடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதையும் இயலுமானவரை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர சைக்கிளோட்ட போட்டிகள், மரதனோட்ட போட்டிகள், கண்களைக் கட்டி பானை உடைக்கும் போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் போது, போட்டி வீரர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கயிறு இழுத்தல், தலையணைகளைக் கொண்டு நடத்தப்படும் போட்டிகளை ஏற்பாடு செய்வது பொருத்தமற்றது எனவும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, விளையாட்டுப் போட்டிகளின் போது சமூக இடைவௌியை பேணுதல், கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற விடயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா குறிப்பிட்டுள்ளார். வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதை, புதுவருட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் உறுதி செய்துகொள்ளுதல் அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, புதுவருடத்திற்காக சொந்த ஊருக்கு செல்வோருக்கு திடீர் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை தொற்று நோய் தடுப்பு நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.