பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்; மூவர் கைது

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்; 3 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 03-04-2021 | 4:06 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நாவற்குழி பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கற்களால் தாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரை, பொதுமக்கள் இணைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நாவற்குழி பகுதியில் திருடர்களைக் கண்டுபிடித்தல், போதைப்பொருள் பாவனையை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் தலைமைதாங்கிய நிலையில், அவர் தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச சபையின், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான 32 வயதான இராமநாதன் யோகேஸ்வரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர். சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.