பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

by Staff Writer 02-04-2021 | 3:55 PM
Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்திலிருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆயரின் திருவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை (05) மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் நேற்று (01) நித்திய இளைப்பாறினார். யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் இன்று காலை 10.30 மணி வரைக்கும் மக்கள் அஞ்சலிக்காக திருவுடல் வைக்கப்பட்டு, பின்னர் மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அன்னாரின் திருவுடல் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டு, மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படும். நாளை மறுதினம் பவனியாக அவரது திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 2 மணி வரை மன்னார் பேராலயத்தில் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று மணியளவில் பேராலயத்திற்கு அருகில் இருக்கும் சாலையில் அனைத்திலங்கை ஆயர்களின் கூட்டு திருப்பலியுடன் ஆயரின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.