ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது

ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

by Bella Dalima 01-04-2021 | 4:18 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவ்வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் உச்சத்தை தொட்ட நட்சத்திரமான ரஜினிகாந்த் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51 ஆவது தாதாசாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், நடிகர் கமல் ஹாசனும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் தன் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது எனவும் திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்து விட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் எனவும் பதிவிட்டுள்ளார். இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என கருதப்படும் தாதாசாஹேப் பால்கேயின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.