லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

by Staff Writer 30-03-2021 | 3:30 PM
Colombo (News 1st) பன்னிப்பிட்டியவில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான லொறி சாரதி 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மஹரகம பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடன் அமுலாகும் வகையில் நேற்று (29) மாலை தொடக்கம் பணி நீக்கம் செய்யப்பட்டார். சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டக்கோவைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார். இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான சாரதியின் லொறி மோதியதில் காயமடைந்த மஹரகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி குற்றம் இழைத்திருந்தாலும், அவரை தாக்குவதற்குரிய அதிகாரம் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

ஏனைய செய்திகள்