ஊழல் மோசடி வழக்கிலிருந்து மொஹான் பீரீஸ் விடுதலை

ஊழல் மோசடி வழக்கிலிருந்து மொஹான் பீரீஸ் விடுதலை

by Staff Writer 30-03-2021 | 3:22 PM
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரீஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர் A.S.M.D. நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான M.M.C. பெர்டினாண்டஸ் ஆகியோரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரத்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாபஸ் பெற்றமையால், பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சார சபையின் தனியார் நிறுவனத்தின் காணி மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், முறையற்ற விதத்தில் சட்ட மா அதிபரின் அறிக்கையை தயாரித்ததாக, அந்த காலகட்டத்தில் சட்ட மா அதிபராக செயற்பட்ட மொஹான் பீரீஸ், பிரதி சொலிஷிட்டர் ஜெனரலாக செயற்பட்ட A.M.M.D. நவாஸ் மற்றும் மின் சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் M.M.C.பெர்டினாண்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.