அரசியல் கட்சிகளின் யாப்பு பரிசீலிக்கப்படவுள்ளது 

அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழு நியமிக்கப்படவுள்ளது

by Staff Writer 28-03-2021 | 4:19 PM
Colombo (News 1st) தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இனம் மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோக பெயர்கள், அவ்வாறான இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை ஆராய்வதற்காகவே குழு நியமிக்கப்படவுள்ளது. கட்சிகளின் யாப்பின் அவ்வாறான சரத்துகள் காணப்படின், அவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சிகளைத் தௌிவூட்டி, அவ்வாறான கட்சிகளின் பெயர்கள் மற்றும் கட்சிகளின் யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.