கடும்போக்குவாத பிரசாரங்களை மேற்கொண்டதாக 2பேர் கைது

கடும்போக்குவாத பிரசாரங்களை மேற்கொண்டதாக இருவர் கைது

by Staff Writer 26-03-2021 | 4:33 PM
Colombo (News 1st) கடும்போக்குவாத பிரசாரங்களை மேற்கொண்டமை மற்றும் நிதி திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். மாத்தளையை சேர்ந்த 46 வயதான ஒருவரும் மட்டக்களப்பு - காத்தான்குடியை சேர்ந்த 47 வயதான ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளையை சேர்ந்த சந்தேகநபர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்த போது, இணையத்தளங்களினூடாக நாட்டில் கடும்போக்குவாத மத பிரச்சாரங்களை மேற்கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்துடன், மட்டக்களப்பை சேர்ந்த சந்தேகநபர் ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் நெருங்கிய ஒருவரென அஜித் ரோஹன கூறினார். சந்தேகநபரின் பேஸ்புக் கணக்கை சோதனைக்குட்படுத்திய போது, அவர் ஏப்ரல் 21 தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்