மியன்மாரில் 7 வயது சிறுமி பொலிஸாரால் சுட்டுக்கொலை

மியன்மாரில் 7 வயது சிறுமி பொலிஸாரால் சுட்டுக்கொலை

by Bella Dalima 24-03-2021 | 6:18 PM
Colombo (News 1st) மியன்மாரில் 7 வயது சிறுமி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அங்கு கடந்த மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில், வயது குறைந்த ஒருவர் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மன்டலே நகரில் தமது வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தந்தையிடம் ஓடிச்சென்ற சிறுமி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் சூழலில், மியன்மார் இராணுவம் படையினரை அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. வன்முறைகளின் போது கொல்லப்பட்டவர்களில் 20-க்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மியன்மாரில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளினால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. எனினும், இதுவரை 261 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் தொடர்பிலான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.