New Diamond:நட்ட ஈட்டினை அறவிடுவது தொடர்பாக ஆலோசனை

New Diamond தீ பரவல்: நட்ட ஈட்டினை அறவிடுவது தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசனை

by Staff Writer 23-03-2021 | 8:56 PM
Colombo (News 1st) New Diamond கப்பலில் தீ பரவியதால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான நட்ட ஈட்டினை அறவிடுவது தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசிக்கவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. இந்த நட்ட ஈட்டுக்கான ஆவணக் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார். New Diamond கப்பலில் பரவிய தீயை அணைப்பதற்கான செலவிற்காக 442 மில்லியன் ரூபா ஏற்கனவே அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இத்தகைய அனர்த்தங்களை முகாமைத்துவப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்குள் ஏற்படுத்துவதற்காக இந்த பணத்தை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். அத்தோடு, கப்பலின் கெப்டனிடமிருந்தும் 12 மில்லியன் ரூபா நட்டஈடு அறவிடப்பட்டுள்ளது. New Diamond கப்பலினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான ஆவணக் கோவை ஏற்கனவே சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபருடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.