பங்களாதேஷில் 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் பிரதமர் மீது கொலை முயற்சி; 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை

by Bella Dalima 23-03-2021 | 6:49 PM
Colombo (News 1st) பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சித்த 14 ஜிகாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவை இரு தசாப்தங்களுக்கு முன்னர் கொலை செய்ய இவர்கள் முயன்றிருந்தனர். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் மூலம் ஹசீனாவை கொலை செய்வதற்கு ஜிகாதிகள் முயற்சித்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஷேக் ஹசீனாவின் மத நிலைப்பாடு தொடர்பில் எதிர்ப்பினை வௌிப்படுத்திய அடிப்படைவாதிகளால் இந்த கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் 100-இற்கும் மேற்பட்ட அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஹசீனாவின் மக்கள் பேரணி இடம்பெற்ற பகுதியில் நிலத்தின் கீழ் இரண்டு வெடி குண்டுகளைப் பொருத்தி கொலை முயற்சி மேற்கொண்ட குழுவிற்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகள் பின்னர் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய சிலருக்கு ஏற்கனவே பங்களாதேஷில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷில் 23 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதுடன், 1750 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.