ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் 

by Bella Dalima 23-03-2021 | 4:55 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த 46/1 தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கு எதிராக பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன. இதேவேளை, இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ​சீனா கோரியது. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறாவது தீர்மானம் இதுவாகும்.