​இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து பரிசீலனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் குறித்து இன்று பரிசீலனை

by Bella Dalima 23-03-2021 | 3:33 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் குறித்து இன்று பரிசீலிக்கப்படவுள்ளது. இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் ஒருங்கிணைந்த குழு தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த தீர்மானம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தேவைப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வட மெசிடோனியா, மொண்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இந்த ஒன்றிணைந்த குழுவில் அடங்குகின்றன. 2012 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் ஆறாவது தீர்மானம் இதுவாகும். 46/1 என இந்த தீர்மானம் பெயரிடப்பட்டுள்ளது.