இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: பா.ஜ.க

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

by Staff Writer 23-03-2021 | 7:22 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, 'தொலைநோக்குப் பத்திரம்' என்ற பெயரில் வௌியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் தேர்தல் அறிக்கையை உத்தியோகபூர்வமாக வௌியிட்டு வைத்தனர். இந்த தேர்தல் அறிக்கையின் 12 ஆவது விடயம் இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதியளித்துள்ளது. இம்முறை சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியமைத்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.